திருமண பொருத்தத்தில் எதை முக்கியமாக பார்க்க வேண்டும் ?

திருமணத்திற்கு இன்று முக்கியமாக பத்து பொருத்தங்கள் பார்க்கிறார்கள். பல திருமணங்கள் பத்து பொருத்தத்தில் அடிபட்டு விடுகின்றன. பத்து பொருத்தத்தில் ரஜ்ஜூப் பொருத்தமும், ராசி அதிபதி பொருத்தமும் மட்டும் பார்த்தால் போதும். நிறைய திருமணங்கள் எளிதில் நடந்து விடும்.

திருமணம் இன்று அதிக அளவில் நிற்பதற்கு மற்றொரு காரணம் செவ்வாய் தோஷம் தான். செவ்வாய் 1,2,4,7,8,12 ஆகிய வீடுகளில் நின்றால் செவ்வாய் தோஷம் ஆகும். இதற்கு பல விதிவிலக்குகளும் உள்ளன. செவ்வாய் தோஷம் பார்க்கத் தேவையில்லை என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து.

திருமணம் நிற்பதற்கு மற்றொரு முக்கிய காரணம் நாக தோஷம் எனலாம். அதாவது ராகுவோ, கேதுவோ லக்கினம் அல்லது இரண்டாம் வீடு அல்லது ஐந்தாம் வீட்டில் நின்றால் சர்ப்ப தோஷம் ஆகும். பெண் ஜாதகத்தில் நான்காம் வீட்டில் ராகு, கேதுக்கள் நின்றாலும் அந்த ஜாதகத்தை ஜோதிடர்கள் விலக்கி விடுகிறார்கள். சந்திரன் நின்ற வீட்டிற்கு அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது அதற்கு 12 ஆம் வீட்டிலோ ராகு நின்றாலும் நாக தோஷம் என்கிறார்கள். ஆக, நாக தோஷம் நிறைய பேருக்கு நிச்சயம் இருக்கும். நாக தோஷம் உள்ள ஜாதகரை அதேபோல் நாக தோஷம் உள்ள ஜாதகருக்குத் தான் பொருத்த வேண்டும் என்று சில ஜோதிடர்கள் சொல்கிறார்கள். நாக தோஷத்திற்கும் பல ஜோதிட விதிவிலக்குகள் உள்ளன. உண்மையில் நாக தோஷமும், திருமண பொருத்தத்திற்கு பார்க்கத் தேவையில்லை என்பது எனது கருத்து.

ஏக தசை பையனுக்கும், பொண்ணுக்கும் ஒரே சமயத்தில் நடந்தால், அந்த ஜாதகங்களைப் பொருத்தக் கூடாது என்கிறார்கள். ஏக நட்சத்திரத்தில் பிறந்த மணமகனையும், மணமகளையும் இணைக்கலாம் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஏக நட்சத்திரத்தில் பிறந்த இருவருக்கும் திருமணத்தின் போது ஏகதசைகள் தான் அனேகமாக நடக்கும். எனவே, இருவருக்கும் ஏக தசை நடந்தாலும் திருமணத்தைத் தடுக்க வேண்டாம்.

பையனுக்கோ, பெண்ணுக்கோ லக்கின சந்தி நடப்பில் இருந்தால் ஜாதகங்களை ஜோதிடர்கள் தட்டி விடுகிறார்கள். திருமணத்தின் போது, பையனுக்கோ பொண்ணுக்கோ ஒரு தசை முடிந்து, அடுத்த தசை ஆரம்பிக்கும் தருவாயில் இருந்தால் அது தசா சந்தி என்கிறார்கள். நடக்கும் தசையும், வரப்போகும் தசையும் ஜாதகருக்கு யோக தசையாக இருந்தால், தசா சந்தி நடப்பில் இருந்தால் அந்த வரன்களை ஏன் நிராகரிக்க வேண்டும்?

அதே போல் கால சர்ப்ப தோஷம் உள்ள ஜாதகத்தையும் திருமணத்திற்கு நிராகரித்து விடுகிறார்கள். அதாவது ராகுவுக்கும், கேதுவுக்கும் நடுவில் எல்லா கிரகங்களும் நின்றால், அது கால சர்ப்ப தோஷம் என்கிறார்கள். கால சர்ப்ப தோஷம் உள்ள ஜாதகருக்கு அவ யோக தசை நடந்தால் தான் கெடுபலன்கள் நடக்கும். அப்படி நடக்கும் போது கால சரப்ப தோஷத்தினால் தான் கெடு பலன்கள் நடந்து விட்டதாக எண்ணி விடுகிறார்கள். கால சர்ப்ப தோஷம் உள்ள ஜாதகருக்கும் நடப்பில் நல்ல யோக தசைகள் நடந்தால் நல்ல பலன்களே நடக்கும் என்பது தான் நிஜம். எனவே கால சர்ப்ப தோஷம் உள்ள ஜாதகத்தை விலக்கத் தேவையில்லை.

எனவே திருமண பொருத்தத்தின் போது, செவ்வாய் தோஷம், நாக தோஷம், ஏக தசை, லக்கின சந்தி, கால சர்ப்ப தோஷம் போன்றவற்றை பார்க்கத் தேவையில்லை என்பது எனது தாழ்மையான கருத்து.
மணமக்கள் இருவருக்கும் நல்ல ஆயுள் இருக்கிறதா என்று பார்க்கலாம். இரண்டாம் வீடும், ஏழாம் வீடும் பாதிப்பில்லாமல் இருக்கிறதா என்று பார்க்கலாம். நடப்பு தசையும், வரப் போகும் தசையும் 6 அல்லது 8 ஆம் அதிபதி தசையாக இல்லாமல் இருக்கிறதா என்று பார்க்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top