ரோகிணி நட்சத்திரம்
“மேனிதான் அறவும் துய்யன் மெல்லிய வெள்ளீய கோபம் செய்யும்
கானிடைத் திரிய வேண்டிக் கருதுவான் பிறரை எண்ணி
மானிடமில்லை மேன்மேல் மனக்கன முடையனாகும்
ஊனமில் திரண்ட கோங்கை உரோகிணி நாளினாளே ”
பொருள்:
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவள் அழகான உடலும், பிறரை கவர்ந்திழுக்கும் பார்வையும் உடையவள், ஆனாலும் முன் கோபத்தால் பகை வளர்ப்பாள்.
பாகனுக்கு அடங்காத யானை மதம் பிடித்து படுகுழியில் வீழ்வது போல் புத்திக்கு அடங்காத மனம் ஒரு மனிதனை மீளாத துயரத்தில் தள்ளிவிடும். மனதை ஆட்டிப் படைக்கும் சந்திரன் அமைந்த நட்சத்திரத்திற்கும் அறிவொளியைத் தரும் சூரியன் புதன் அமைந்த நட்சத்திரத்திற்கு உள்ள தார பலன் ஒருவரின் ஆசைக்கும் ஆற்றலுக்கும் உள்ள இடைவெளியை காட்டும். கிரகங்களும், பாவங்களும் அமைந்த நட்சத்திர பாதங்களே ஒருவரின் வாழ்க்கை பாதையை காட்டும்.
ரோகிணி நட்சத்திரத்தின் சிறப்பு
சனிக்கிழமையும், ரோகிணி நட்சத்திரமும் கூடும் நாளில் பிறந்தவர்கள் சாதனை படைப்பார்கள்.
ரோகிணி நட்சத்திரத்தின் வலிமை.
- அமைதியான வாழ்க்கையை விரும்புவதால் வீண் வம்புக்கு போக மாட்டார்கள்.
- கலைத்துறையில் ஜொலிப்பார்கள். எந்த ஒரு கலையையும் எளிதாக கற்றுக் கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள்.
- இனிமையாக பேசக்கூடிய இவர்கள் பகைவர்களைக்கூட நண்பரகளாக்கி கொள்ளும் ஆற்றல் உள்ளவர்கள்.
ரோகிணி நட்சத்திரத்தின் பலவீனம்
- ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுகபோகங்களை விரும்புவார்கள் அதனால் கடன் தொல்லையில் மாட்டிக் கொள்ள வாய்ப்புண்டு.
- பெண் பிரியர்களாகவும் இருப்பதால் காதல் தோல்வி உண்டாகும்.
கூட்டு கிரக பலன்
(ரோகிணி நட்சத்திரத்தில் அமர்ந்த சந்திரனுடன் பிற கிரகங்கள் இணையும் போது உண்டாகும் பழங்களையும் ஆராய வேண்டியது முதன்மையானது)
- ரோகிணி நட்சத்திரத்தில் சூரியன் இருந்தால் மரியாதைக்குரியவர், பல மொழி புலமை உண்டு.
- செவ்வாய் அமர்ந்திருந்தால் அதிக காமம் எண்ணமுடையவர்.
- புதன் அமைந்திருந்தால் குடும்ப பாசம் அதிகமுடையவர்.
- சுக்கிரன் அமர்ந்திருந்தால் அனைவரிடமும் நட்பாக பழகக் கூடியவர்.
- சனி அமர்ந்திருந்தால் கடுமையான சொல் உடையவர். வட்டி தொழிலில் லாபம் உண்டு.
- குரு அமர்ந்திருந்தால் நினைத்த காரியத்தை முடிக்க கூடியவர்கள்
- ராகு அமர்ந்திருந்தால் குடும்பத்தில் ஆதரவு இருக்காது.
- கேது அமர்ந்திருந்தால் கேளிக்கையும், பொழுதுபோக்கையும் வாழ்க்கையாக கொண்டவர்கள்.
ரோகிணி நட்சத்திர பாத பலன்
ரோகிணி நட்சத்திரத்தின் முதல் பாதம்: மேஷ நவாம்சம் செவ்வாய் பகவானால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர்கள் செல்வந்தர் ஆனாலும் நிலையான மன உறுதி இல்லாதவர்.
ரோகிணி நட்சத்திரத்தின் இரண்டாவது பாதம் ரிஷப நவாம்சம். சுக்கிர பகவானால் ஆளப்படுகிறது. அன்பும், பாசமும் அதிகம் உடையவர்கள். அடிக்கடி நோயின் தாக்கத்தால் நிம்மதி குறையும்.
ரோகிணி நட்சத்திரத்தின் மூன்றாவது பாதம் மிதுன நவாம்சம். புதன் பகவானால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர்கள் கணித வித்தையில் சிறந்தவரானாலும் ஆணவத்தால் பகை வளர்ப்பார்.
ரோகிணி நட்சத்திரத்தின் நான்காவது பாதம் கடக நவாம்சம். சந்திரனால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர் தெளிந்த சிந்தனையுடையவர். ஆனாலும் பெண்களால் ஏமாற்றப்படுவார்.
ரோகிணி நட்சத்திர நாளில் செய்ய தகுந்த காரியங்கள்
சந்திரன் இடப்பெயர்ச்சிக்கு காரக கிரகம் என்பதால் இந்த நட்சத்திர நாளில் இடப்பெயர்ச்சி, வீடு மாற்றம் செய்யலாம்.
சந்திரன் கலை இசை போன்றவற்றுக்கு அதிபதி என்பதால் ரோகிணி நட்சத்திரம் வரும் நாளில் கலை, இசை பயிற்சி போன்றவற்றை தொடங்கலாம்.
ரோகிணி நட்சத்திரத்தன்று அன்னதானம் செய்தால் பல மடங்கு புண்ணியம் பெருகும்
ரோகிணி நட்சத்திரம் வரும் நாளில் செய்யக்கூடாதவை
வியாழக்கிழமையும் ரோகிணி நட்சத்திரமும் கூடினால் விஷ யோகம் புதிய தொழில் முயற்சி செய்யக் கூடாது.
பரிகாரம் :
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரோகிணி நட்சத்திரம் வரும் நாளில் காஞ்சிபுரத்தில் உள்ள பாண்டவ தூத பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பு.





Leave a reply