சித்திரை நட்சத்திரம்
“பலமான சரீரவான் மார்பகலன் நடை கடியன் பரிந்து சொல்வான் குலவிய நற்குணன் நடை நற்பிரியன் தாமத புத்திக்குரிசில் நண்பன் நிலைமை பெறும் திட வசனன் முகத்துறு நன் மறு உளன் நித்திரையும் அற்பன் செலவு செய்யான் சவுரியவான் தூக்கம் உன்னான் கோபி சித்திரையினானே.”
-சாதக அலங்காரம்
உலகம் ஒரு நாடக மேடை, அந்த நாடக மேடையில் தோன்றி மறைபவர்கள். கண்வழி மனமும் செல்ல, மனம் வழி செயலும், செயலின் வழியில் நவரசமும் சேரும் நாட்டியமே வாழ்க்கை. நவரச நாயகனாகிய சந்திரனே மகிழ்ச்சியில் கூத்தாடும் மனதிற்கும், பொங்கி வரும் அழுகைக்கும் காரணமாகிறான். சந்திரன் அமரும் நட்சத்திரமே வாழ்க்கையை தீர்மானிக்கிறது.
சித்திரை நட்சத்திரத்தின் சிறப்பு
பூர்வ பட்சத்தில் சித்திரை நட்சத்திர நாளில் இந்திர தனுசு(வானவில்) தெரிந்தால் நல்ல மழை உண்டு.
சித்திரை நட்சத்திரத்தின் வலிமை
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிரிகளை விரட்டி அடிக்கும் திறனும், செயல்முறையில் வலிமையும் கொண்டவர்.
கலைத்துறையில் புகழ் பெறுபவர்கள் ஆகவும் நுட்பமான அழகியல் உணர்வுடனும் இருப்பர்.
சித்திரை நட்சத்திரத்தின் பலவீனம்
முன்கோபம் அதிகம் இருக்கும். தீய நண்பர்களால் பொருள் இழப்பு ஏற்படும்.
கூட்டு கிரக பலன்
சித்திரை நட்சத்திரத்தில் அமர்ந்த சந்திரனுடன் பிற கிரகங்கள் இணையும் போது உண்டாகும் பலன்களையும் ஆராய வேண்டியது முதன்மையானது.
சித்திரை நட்சத்திரத்தில் சூரியன் இருந்தால் மூதாதையர் சொத்து நஷ்டம் ஆகும்.
சித்திரை நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்திருந்தால் ஐந்து வயது வரை கண்டமிருக்கும்.
சித்திரை நட்சத்திரத்தில் புதன் அமர்ந்து இருந்தால் பூர்வ ஜென்ம புண்ணியத்தால் காப்பாற்றப்படுவான்.
சித்திரை நட்சத்திரத்தில் சுக்கிரன் அமர்ந்திருந்தால் கற்ற கல்வி பயன் தராது.
சித்திரை நட்சத்திரத்தில் சனி அமர்ந்திருந்தால் வாக்கு பலிதம் உண்டாகும்.
சித்திரை நட்சத்திரத்தில் குரு அமர்ந்திருந்தால் செல்வம், செல்வாக்கு உடையவன்.
சித்திரை நட்சத்திரத்தில் ராகு அமர்ந்திருந்தால் அறுவை சிகிச்சையால் ஆபத்து உண்டாகும்.
சித்திரை நட்சத்திரத்தில் கேது அமர்ந்திருந்தால் தீராத நோயால் அவதிப்படுவார்.
| சித்திரை நட்சத்திர தின பலன் | |
| சித்திரை | பதட்டம் |
| சுவாதி | பணவரவு |
| விசாகம் | ஆபத்து |
| அனுஷம் | வாம வேதை |
| கேட்டை | முயற்சியில் தடை |
| மூலம் | வெற்றி |
| பூராடம் | ஏமாற்றம் |
| உத்திராடம் | சாதனை |
| திருவோணம் | புகழ் |
| அவிட்டம் | எச்சரிக்கை |
| சதயம் | சமூக வேதை |
| புரட்டாதி | சாதகமற்றது |
| உத்திரட்டாதி | அதிஷ்டம் |
| ரேவதி | சண்டை |
| அஸ்வினி | சாதாரண பலன் |
| பரணி | எதிர்பாராத தொல்லை |
| கார்த்திகை | சந்திராஷ்டமம் |
| ரோகிணி | தட்சண வேதை |
| மிருகசீரிடம் | சாதகம் |
| திருவாதிரை | புதிய முயற்சி |
| புனர்பூசம் | எதிர்பாராத மற்றம் |
| பூசம் | சிக்கல் |
| ஆயில்யம் | கவனம் தேவை |
| மகம் | புதிய பொருள் சேரும் |
| பூரம் | அவமானம் |
| உத்திரம் | மனக்கவலை |
| அஸ்தம் | நன்மை |
| குறிப்பு: சித்திரை நட்சத்திரக்காரர்கள் அன்றைய நடப்பு நட்சத்திரத்தில் உள்ள பலன்களை பார்த்து அதன்படி செயல்படவும் | |
சித்திரை நட்சத்திர பாத பலன்
சித்திரை நட்சத்திரத்தின் முதல் பாதம் சிம்ம நவாம்சம் சூரியனால் ஆளப்படுகிறது. தீய செயல்களில் ஈடுபடுவான். கண் நோயால் பாதிக்கப்படுவான்.
சித்திரை நட்சத்திரத்தில் இரண்டாவது பாதம் கன்னி நவாம்சம் புதன் பகவானால் ஆளப்படுகிறது. வாக்கு வல்லமை உடையவன். துறவி ஆவான்.
சித்திரை நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் துலாம் நவாம்சம் சுக்கிர பகவானால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர்கள் அளவில்லாத செல்வம், செல்வாக்கு உடையவர்கள்.
சித்திரை நட்சத்திரத்தில் நான்காவது பாதம் விருச்சக நவாம்சம் செவ்வாயால் ஆளப்படுகிறது. இந்த மாதத்தில் பிறந்தவர் பகைவர்களுக்கு எமனாக மாறுவான். சுய சிந்தனை அதிகம் உடையவன்.
சித்திரை நட்சத்திர நாளில் செய்ய தகுந்த காரியங்கள்
புதிய ஆபரணம் அணிதல், வித்தை ஆரம்பிக்க நல்லது.
சித்திரை நட்சத்திர நாளில் செய்யக்கூடாத காரியங்கள்
சனிக்கிழமை திரையோதசி திதியும் சித்திரை நட்சத்திர நாளில் கூடினால் சுப காரியங்கள் செய்யக்கூடாது.
சித்திரை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பரிகாரங்கள்
குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டால் வாழ்க்கை வளமாகும்.
திருவைகாவூர் வில்வ நாதர் கோவிலில் அன்னதானம் செய்தால் தோஷம் விலகும்.





Leave a reply