குருமங்கள யோகம்
ராசிக் கட்டத்தின் ஒரே இடத்தில் குருவும் செவ்வாயும் சேர்ந்தாலும் செவ்வாயின் 4,7,8ம் பார்வையில் குரு இருந்தாலும் குருவின் 5,7,9ம் பார்வையில் செவ்வாய் இருந்தாலும் “குருமங்கள யோகமாகும்”. நிச்சயம் வீடு, மனை, யோகம் நிறைவேறும்.
நல்ல ஆடம்பரமான வசதியான குடும்பத்தில் பிறந்து இருப்பார்கள். சகல சவுபாக்கியங்கள், புகழ், அந்தஸ்து கவுரவத்துடன் வாழ்வார்கள்.தாய்வழி பூர்வீகச் சொத்து கிடைக்கும். சுய உழைப்பால் உருவாகும் சொத்தும் மிகைப்படுத்தலாக இருக்கும். கல்வி நிறுவனங்கள் நடத்துவார்கள். தாயும், தந்தையும் பாக்கியவான்கள். தாயார் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள்.
தாய் வழியில் அதிக உறவினர்கள் இருப்பார்கள். உற்றார், உறவினர்கள் ஆதரவு, அனுசரனை உண்டு.இவர்கள் பிறவியில் ஏழையாக பிறந்தாலும் இந்த அமைப்பு இருந்தால் படிப்படியாக உழைத்து முன்னேறி உன்னத நிலையை அடைவார்கள்.

அத்துடன் எந்த கிரகச் சேர்க்கையாக இருந்தாலும் பொதுவாக யோகம், அவயோகம் என்று பலன் சொல்ல முடியாது. இரு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்கள் அனைத்தும் ஒரு ஆதிபத்தியத்திற்கு சுப பலனை வழங்கினால் மற்றொரு ஆதிபத்திய ரீதியாக ஏதேனும் அசுப விளைவுகளைத் தராமல் போகாது.
உதாரணமாக குரு என்றால் குழந்தை, பணம், தங்கம். கோடிக்கான பணம், தங்கத்தை குறிக்கும் கிரகம் ஒரு ஜாதகத்தில் பலமாக இருந்தால் அளவிற்கு அதிகமாக பணம் வைத்து இருப்பார்கள். ஆனால் குழந்தைகள் மூலம் மன வேதனையை தருவார்.
நல்ல பண்பான பிள்ளைகளைத் தரும் குருபகவான் அவர்களை நல்ல முறையில் வளர்க்கத் தேவையான பொருளாதாரத்தை வழங்கு வதில்லை.
குருமங்கள யோகத்தால் உண்டாகும் நன்மைகள்.
நிலம் வாங்குவது, வீடு கட்டுவது போன்ற சொத்து சேர்க்கை, மருத்துவராகும் யோகம், விவசாயத்தின் மூலம் வருமானம், நல்ல மன ஆரோக்கியம், நல்ல நிலையில் இருக்கும் தாய், தந்தை , சீருடை பணி, காவல் துறை, ராணுவத்தில் வேலை, நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில், தீயணைப்புத் துறை, சமையல் வேலை, தொழில் போன்றவற்றை செவ்வாய் மற்றும் குருவின் வலிமையைப் பொருத்து இந்த கிரகங்கள் கொடுக்கும் எனலாம்.
செல்வாக்கு, சொல் வாக்கு, புகழ், அந்தஸ்து, கவுரவம், மரியாதை தானாக உயர்வது, எதிரிகள் இல்லாத சூழல், எதிரிகளை வெற்றி கொள்ளும் ஆற்றல், துணிந்து செய்யும் காரிய சித்தி வெற்றி, சகோதர வழி ஆதரவு, சகோதர மேன்மை, எதையும் சாதிக்கும் ஆண் வாரிசுகள், வாரிசுகளால் உண்டாகும் பெருமை, அதிகார அந்தஸ்து நிறைந்த உத்தியோகம், தொழில். நாடாளும் யோகம்.
சொத்துக்களின் மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கும். ரியல் எஸ்டேட், புரமோட்டர்ஸ், போர்வெல்ஸ், காவல் உயர் அதிகாரி, நிர்வாக அதிகாரிகளை உருவாக்கு வதும் இந்த குரு மங்கள யோகம் தான்.