ஆலயங்களில் அர்ச்சகரால் உலக மக்கள் நன்மைக்காக அனுதினமும் அர்ச்சனைகள், பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நமக்காகத்தானே வழிபாடுகள் நடைபெறுகின்றன, இந்த பூஜை பொருள்களை நான் தானே கொடுத்தேன், நான் அதிகாரம் படைத்தவன் என்னை யாரும் கேட்க முடியாது என்று நினைக்கக் கூடாது.

நமது அறியாமையால் ஆகமங்களுக்கு எதிரான காரியங்கள் நடைபெற்றால் அங்குள்ள தெய்வ சாந்நித்தியம் குறைந்து போகும். அதற்கு நாம் காரணம் ஆகி விடுவோம். இதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நம்மை பாதிக்கும். சந்தேகம் வேண்டாம் அனைத்து ஜீவன்களும் நடைபெறும் வழிபாட்டை நமது அறியாமையால் மாற்றுவது தவறு. ஆகமங்கள் வழியே பிரதிஷ்டை செய்யப்பட்ட தெய்வ வடிவங்களை கண்டிப்பாக தொடக்கூடாது.
சிலர் அவர்கள் குடும்பத்துக்கென உருவாக்கிய குலதெய்வ ஆலயங்கள் மற்றும் பஜனை மடங்கள் போன்றவற்றில் அங்குள்ள தெய்வங்களை அந்த ஆலயத்தை நிர்வகிக்கும் பெரியவர்கள் அனுமதித்தால் தொட்டு வழிபடலாம். நம் வீட்டில் உள்ள பணப்பெட்டியை நாம் தொடலாம், வேறொருவர் வீட்டில் உள்ள பணப்பெட்டியையோ, வங்கியில் உள்ள பணப்பெட்டகத்தையோ நாம் தொடுவது தவறு. ஆகவே ஆகம விதிப்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட தெய்வ வடிவங்களை தொடுவது கூடாது.