ஏழரை சனியில் நல்ல பலன்கள் நடக்கவே நடக்காதா?

ஏழரை சனி

முதலில் ‘ஏழரை சனி’ காலம் எது என்பதை அறிந்து கொள்வோம்.சனி மிகவும் மெதுவாக செல்லும் கிரகமாகும். அது ஒரு ராசி கட்டத்தில் சுமார் 2 1/2 ஆண்டுகள் பயணிக்கும்.

உங்கள் ஜென்ம ராசி கட்டத்திற்கு பின் கட்டத்தில், அதாவது உங்கள் ஜென்ம ராசிக்கு 12-ஆம் ராசியில் சனி நுழையும் போது உங்களுக்கு ‘ஏழரை சனி’ காலம் ஆரம்பிக்கிறது. 12 ஆம் இடம் விரைய ஸ்தானம் என்பதால் அதை விரையச் சனி காலம் என்கிறார்கள்.

அடுத்து, உங்கள் ஜென்ம ராசியில் சனி பயணிக்கும் அந்த இரண்டரை ஆண்டு காலத்தை ஜென்ம சனி என்கிறார்கள்.

உங்கள் ராசிக்கு அடுத்த ராசியில் அதாவது உங்க ஜென்ம ராசிக்கு இரண்டாம் வீட்டில் சனி பயணிக்கும் அந்த இரண்டரை ஆண்டு காலத்தை பாத சனி என்கிறார்கள். ஆக, இந்த ஏழரை ஆண்டு காலத்தை தான் ‘ஏழரை சனி’ என்கிறோம்.

ஏழரை சனி

பொதுவாக, ஒருவருக்கு 7 1/2 சனி ஆரம்பிக்கப் போகிறது என்றாலே மிகவும் அச்சம் அடைகிறார்கள்.எழரை சனிக்கு அந்த அளவுக்கு பயப்பட தேவையில்லை என்றே சொல்ல வேண்டும்.

ஏழரை சனி தவிர்க்க முடியாதது. எல்லோருக்கும் ஏழரை சனி வந்தே தீரும். நீண்ட ஆயுள் உடையவருக்கு, அவர் வாழ்வில் மூன்று முறை ஏழரை சனி வரும். ஒரு சிலருக்கு எழரை சனி அதிகமாக பாதிப்பதில்லை என்பதையும் அறிய வேண்டும்.

சில நட்சத்திரங்கள் இரண்டு ராசிகளில் பரவி இருக்கும். இதை உடைபட்ட நட்சத்திரம் என்கிறோம். உதாரணமாக மேஷ ராசியில், அஸ்வினி நட்சத்திரத்திற்கு நான்கு பாதங்களும், பரணி நட்சத்திரத்திற்கு நான்கு பாதங்களும், கார்த்திகை நட்சத்திரத்தின் ஒரு பாதமும் உள்ளது. கார்த்திகை நட்சத்திரத்தின் மீதி மூன்று பாதங்கள் ரிஷப ராசியில் வரும். எனவே, கார்த்திகை நட்சத்திரத்தை உடைபட்ட நட்சத்திரம் என்கிறோம். உடைபட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களை ஏழரை சனி அதிகமாக பாதிப்பதில்லை.

மேலும், ரிஷபம், துலாம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்களை ஏழரை சனி அதிகம் பாதிப்பதில்லை. மேலே சொன்ன ராசிகளை லக்கினமாக கொண்டவர்களுக்கும் 7 1/2 சனி அதிகம் பாதிப்பதில்லை.

மேலும் மிகவும் முக்கியமாக, நல்ல தசா புக்திகள் நடப்பில் இருந்தால் ஏழரை சனி அதிகம் பாதிப்பது இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

அது சரி, ஏழரை சனி அப்படி என்ன தான் செய்யும்? பொருளாதார இழப்புகள், தோல்விகள், நோய், எதிரி, கடன், வம்பு வழக்கு, அவமானம், விபத்து போன்ற தீய பலன்களை சனி கொடுக்கிறது.

அப்படியென்றால் 7 1/2 சனியில் நல்ல பலன்கள் நடக்கவே முடியாதா?

அப்படி சொல்ல முடியாது. ஏழரை ஆண்டுகள் என்பது மிக நீண்ட காலம்.நிறைய பேருக்கு ஏழரை சனி காலத்தில் தான் திருமணம் நடக்கிறது. குழந்தைகள் பிறக்கின்றன. ஒரு சிலருக்கு நிலம், வீடு, சொத்து, வாகனம் போன்ற யோகங்கள் அமைகின்றன.

பொதுவாக ஏழரை சனி காலத்தில் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை. அதிக முயற்சிகள் எடுத்து கடின உழைப்பு போட்டு, ஓரளவுக்கு வெற்றி காண முடிகிறது.

அப்படி என்றால் ஏழரை சனி காலத்தில் புதிய தொழில் தொடங்கக்கூடாதா? திருமணம் செய்யக்கூடாதா? வீடு கட்டக்கூடாதா? சுப காரியங்கள் செய்யக்கூடாதா? என்று சிலர் கேட்கிறார்கள்.

ஏழரை ஆண்டு காலம் என்பது மிகவும் நீண்ட காலம் என்பதால், அவ்வளவு காலம் ஒரு சுப காரியத்தை நாம் ஒத்தி போட முடியாது.எனவே, ஏழரை சனி காலத்தில் அவ யோக தசைகள் நடக்கவில்லையெனில் தாராளமாக தொழில் தொடங்கலாம். ஏழரை சனி காலத்தில் தாராளமாக திருமணமும் செய்யலாம். இந்த சுப காரியத்தையும் தள்ளி போட வேண்டாம்.

எனினும் தொழில் ஆரம்பிப்பது என்றால் கொஞ்சம் கவனமாக செய்வது நல்லது. ஏழரை சனி காலத்தில் ரிஸ்க் எடுக்க வேண்டாம். வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது.மற்றபடி ஏழரை சனிக்கு பெரிதாய் பயப்பட வேண்டியதில்லை. ஏழரை சனியில், நிறைய நல்ல பலன்களும், ஜாதகரின் யோக தசா புத்திகளுக்கு ஏற்ப நிச்சயம் நடக்கும் என்றே சொல்ல விரும்புகிறேன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top