பக்தி
பகவானைப் பார்க்கத் தவிக்கும். அவன் தரிசனம் கிடைக்காவிட்டால் துடிக்கும். குலசேகர ஆழ்வார் ஸ்ரீரங்கநாதரைக் காணத் துடிக்கிறார்.
“திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி
திரைக்கையால் அடிவருடப் பள்ளி கொள்ளும்
கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு
என் கண்ணிணைகள் என்று கொலோ
களிக்கும் நாளே
– என்று கதறிப் பாடுகிறார்.
இந்தப் பக்திக்குக் கட்டுப்படுகிறான் பகவான்.
ஒரு கதை;
ஒரு ஊரில் பரம வைஷ்ணவ பக்தன். அவனுக்கு பத்ரி நாராயணனைச் சேவிக்க ஆசை. பயணச் செலவுக்குத் தினமும் உண்டியலில் காசு சேமிக்க ஆரம்பித்தான். இதற்கிடையில், அவனுக்குத் திருமண ஏற்பாடு நடந்தது. திருமணச் செலவுக்கு உண்டியல் பணம் உதவியது.
மீண்டும் உண்டியலில் பணம் சேமிக்க ஆரம்பித்தான்.அவனுக்கு இரண்டு மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். செலவுக்கு உண்டியல் உத வியது. பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி திருமணம், பேரன், பேத்தி எனக் காலம் கழிந்தது.

இனி வேறு வேலை இல்லை. உண்டியல் பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினார். சில மாதங்கள் நடந்து பத்ரிநாத் வந்தடைந்தார். கோயில் வாசலில் வந்து நிற்க, பட்டர் நடை சாத்த, சரியாக இருந்தது. இனி ஆறு மாதங்களுக்குப் பிறகு நடை திறக்கப்படும் எனக் கூற, முதியவர் அதிர்ந்தார்.
“அய்யா தயவு செய்யுங்கள். வெகுதூரம் நடந்து வந்திருக்கிறேன். அடுத்த ஆறு மாதம் இருப்பேனோ தெரியாது. ஒரு முறை அவனை சேவித்துவிடுகிறேன்.” என கண்ணீர்விட்டு அழ. பட்டரோ அசைவதாக இல்லை. விதிப்படி மூடிய நடை திறக்கப்படாது எனக் கூறி நகர்ந்தார். அனைவரும் இறங்க, இருட்டத் தொடங்கியது. அப்போது, ஒரு சிறுவன் அங்கு வருகிறான். அவன் அந்த முதியவரிடம், “என்ன தனிமையில் சிந்தனை. இங்கு ராத்திரி இருக்கக் கூடாதே. நீங்கள் மற்றவர்களோடு போகவில்லையா? என கேட்க இவர் தன் கதை சொன்னார்.
சிறுவன் “சரி வாருங்கள் நான் தங்கி உள்ள குகை உள்ளது அங்கு வந்து உணவு அருந்தி பிறகு பேசிக் கொள்ளலாம்” என கூறி அவரை அழைத்துச் சென்றான்.அவருக்கு உணவளித்து “தாத்தா உறங்குங்கள் எல்லாம் நல்லதாகவே நடக்கும் எனக் கூறி சென்றான். முதியவரும் பக்தியோடு நமஸ்மரணம் செய்துவிட்டு உறங்கினார்.
பொழுது விடிந்தது. கிழவனே குகையை விட்டு வெளியே வந்தார்.கோயில் திறந்துள்ளது. கூட்டமோ ஏராளம். பட்டர் ஆறு மாதம் ஆகும் என்றார் நடை திறக்கப்பட்டு உள்ளதே? என பட்டாரிடம் சென்று கேட்டார்”சாமி கோயில் திறக்க ஆறு மாதம் ஆகும் என்றீர்கள். இப்ப மறுநாளே திறந்து இருக்கிறீர்களே” என்று கேட்க பட்டரோ யோசித்தார்.
அடடா இந்த முதியோர் ஆறு மாதங்களுக்கு முன்பு நடை சாத்திய நேரத்தில் வந்தவர் ஆயிற்றே என நினைத்து முதலில் நாராயணனை வணங்கி விட்டு வாருங்கள் என கூற இருவரும் உள்ளே சென்றார் அங்கே நாராயணன் அந்த சிறுவனாக காட்சி தந்தான். இதுதான் உண்மையான பக்தி உண்மையான பக்திக்கு ஆற்றல் அதிகம்.