முன்னோர் மறைந்த மாதமும், திதியும் வரும் நாளில் வருடம் தோறும் சிராத்தம் செய்ய வேண்டும். ஒருவரின் பிறந்த நாளை அவரது நட்சத்திரத்தின் அடிப்படையில் கொண்டாடுவதும், இறுதி நாளை அன்றைக்கு இருக்கும் திதியின் அடிப்படையில் வருடம் தோறும் அனுஷ்டிப்பதும் வழக்கம். சிராத்தம் செய்வதைதான் ‘திவசம்’ என்றும் ‘திதி கொடுத்தல்’ என்றும் குறிப்பிடுகிறோம்.
முன்னோருக்கு குறிப்பிட்ட திதி நாள் அன்று தான் சிராத்தம் செய்ய வேண்டும். கர்மா செய்பவருக்கு ஏதேனும் தவிர்க்க முடியாத காரணத்தால் அது செய்ய முடியாமல் போனால் மட்டுமே வேறு நாள் பார்க்க வேண்டும். மற்றபடி குறிப்பிட்ட திதியன்று ‘திவசம்’ செய்வதே சிறந்தது.

இறந்தவருக்கு நாம் இங்கு செய்யும் கிரியைகள் அவர் எங்கு எந்த உருவில் இருந்தாலும் அவரை சென்றடையும். நாம் நம் கைபேசியில் அனுப்பும் குறுஞ்செய்தி வேறு ஒருவரின் கைபேசிக்கு செல்வதை போல் நமது சனாதன தர்மத்தில் செய்யக்கூடிய ஒவ்வொரு கிரியையும் அதற்குரிய பலனை தரவே செய்யும்.
இவை அனைத்தும் காலங்காலமாக நம் முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வருபவை ஆகும். எனவே ஒருவர் மறைந்த திதியில் தான் அவருக்கு சிரார்த்தம் செய்ய வேண்டும்.